(இராஜதுரை ஹஷான்)
அடிப்படைவாதத்தை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழித்து தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி புதிய அரசாங்கத்தில் பாதுகாப்புசார் சட்டம் திருத்தப்பட்டு புதிய சட்டம் உருவாக்கப்படும். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் உண்மை காரணி இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை. என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சுபீட்சமான எதிர்கால கொள்கையினை செயற்படுத்தும் பலமான பாராளுமன்றம் தோற்றம் பெற வேண்டும் என்பதில் பெரும்பாலான மக்கள் அதிகளவில் அக்கறை கொண்டுள்ளார்கள்.
நிறைவேற்றுத்துறையும், சட்டத்துறையும் முரண்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்த அனுபவம் மக்களுக்கு உண்டு. ஆகவே மீண்டும் அந்த தவறை செய்யமாட்டார்கள்.
நல்லாட்சி அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் ஏற்பட்டுள்ள அரசியலமைப்புசார் மற்றும் பொதுப் பிரச்சினைகளுக்கு புதிய அரசாங்கத்தில் தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும் இதற்காகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை கோருகிறோம். காலம் தாழ்த்தப்பட்டுள்ள மாகண சபை தேர்தலை இவ்வருடத்திற்குள் நடத்த சாதகமான தேர்தல் முறைமையை உருவாக்க வேண்டும்.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் உண்மை காரணி இதுவரையில் அறியப்படவில்லை. தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்ததால் அடிப்படைவாதம் மீண்டும் நாட்டில் தலைத்தூக்கியது. தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பு சார் சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டு தேவைக் கேற்ப புதிய சட்டங்கள் உருவாக்கப்படும்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு அரசியலமைப்பின் 17 மற்றும் 19 வது திருத்தங்களில் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருதலை பட்சமாகவே செயற்படுகின்றன என்பதற்கு கடந்த காலங்களில் இடம் பெற்ற பல சம்பவங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்.
பொதுத்தேர்தலில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவான மேடையேறுகிறார்கள்.
உயர் அதிகாரிகளை நியமிக்கும் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளார்கள்.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிக்க வேண்டாம் என குறிப்பிடுகிறார். ஆகவே இவர்களின் செயற்பாடுகளினால் ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளை பதவிக்கு நியமிக்கும் அதிகாரம் புதிய அரசாங்கத்தில் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படும். என்றார்.
கருத்துரையிடுக