கொவிட்-19 இரண்டாம் அலை தொடர்பில் களநிலை அறிக்கையும் வெளியீடு

பொது சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சுகாதார சேவை சீர்குலைவதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்து, சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர், பவித்ரா தேவி வன்னியாராச்சிச்கு, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடிதமொன்றை எழுதியுள்ளது.

பொதுச்சுகாதார பரிசோதகர்களின் பணிப் புறக்கணிப்பினால் ஏற்படக்கூடிய சுகாதார சேவைப் பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாத்தல் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சங்கத்தின் செயலாளர், வைத்தியர் செனால் பெனாண்டோ அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனா நோயின் தாக்கத்தின் மத்தியில், தேர்தல்கள் தொடர்பான வர்த்தமானியின் ஊடாக அவசியமற்ற அதிகாரங்களைக் கோரி, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்களின் அடிப்படையற்ற செயற்பாட்டினால் சுகாதார சேவைகள் வீழ்ச்சியடையாத வகையில் செயற்படுத்துவதற்கு நாங்கள் பின்வரும் முறைகளைப் பிரேரிக்கின்றோம்.

* சுகாதார வைத்திய அதிகாரிகளினால் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை செவ்வனே மேற்கொள்ள சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல்.
* போதியளவு எண்ணிக்கையான வைத்திய அதிகாரிகளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு நியமனம் செய்தல்.
* கொரோனா நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான மனிதவளங்கள் சம்பந்தமாக மாற்று வழிகளைச் சிந்தித்து அவர்களை சுகாதார வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையில் அவர்களின் தொழிநுட்ப ஆலோசனையின் பிரகாரம் சேவையில் இணைத்தல்.

எம்மால், முன்வைக்கப்பட்ட மேற்படி பிரேரணைகளை செயற்படுத்துவதன் மூலம் கொரோனா நோயினைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாரியளவில் வினைத்திறனாக செய்ய முடியும். இதற்கான பூரண ஆதரவினை எமது சங்கம் வெளிப்படுத்துகின்றது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட்-19 இரண்டாவது அலை பற்றிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கள நிலை அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.