(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

அமரர் தொண்டமான் ஒரு சிறந்த அரசியல் ஞானியாக காணப்பட்டார். ஆறுமுகன் தொண்டமான் இளம் வயதில் எம்மை விட்டு பிரிந்து போனாலும் இவரின் சேவைகளை பார்த்தால் வியப்பானது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் குடும்பம் இந்திய வம்சாவளி மக்களுக்கு அளப்பரிய சேவையை செய்துள்ளது. அமரர் ஆறுமுகன் தொண்டமானும் நானும் ஒரே சந்தர்ப்பத்தில் தான் பாராளுமன்றத்திற்கு வந்திருந்தோம். சிறந்த முறையில் பாராளுமன்றில் பணியாற்றியிருந்தோம். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஒரு சிறந்த அரசியல் ஞானியாக காணப்பட்டார். அவரின் அரசியல் தீர்மானங்கள் மூலம் பலரை ஈர்த்திருந்தார். அவருடைய பேரன் ஜீவன் தொண்டமான் இந்த அரசியல் இடைவெளியை நிரப்ப வந்துள்ளார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவருடைய மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அனைத்து அரசாங்கங்களுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளார். அவரை எதிர்கட்சியில் பார்ப்பது மிகவும் கஷ்டமாகும்.

ஆனால், கடந்த நல்லாட்சியில் அவர் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தார். கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரச்சினைகள் வரும் சந்தர்ப்பத்தில் மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். தொழிற்சங்க அரசியலில் அவர் தமது முதிர்ச்சி தன்மையை காட்டியிருந்தார். பேரம் பேசும் தன்மையில் சிறந்தவராக காணப்பட்டார்.

பிரிவினை வாதத்திலிருந்து  மலையக மக்களை காப்பாற்றியிருந்தார். ஆறுமுகன் தொண்டமான் இளம் வயத்தில் எம்மைவிட்டு பிரிந்து போனாலும் இவரின் சேவைகளை பார்த்தால் வியப்பானது. கூட்டு ஒப்பந்தம் செய்யும் போதும் சரி ஆட்சித் தலைவர்களுடன் தமது அமைச்சு பொறுப்புகள் குறித்து வாதாடும் போதும் சரி மிகவும் துணிகரமாகச் செயற்பட்டுள்ளார். அரசியல் ரீயாக அவரை அச்சப்படுத்தும் வகையில் செயற்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் துணிவுடன் செயற்பட்டிருந்தார். சௌமியமூர்த்தி தொண்டமானின் சிலை முன்னாள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ளது.

பெரும் தேசிய தலைவர்களுடன் இந்த சிலை அமையப்பெற்றுள்ளது. தொண்டமான் நாமம் இலங்கையின் தேசிய வீரர்களின் பட்டியில் அடங்கியதாகும். அந்த நீண்ட பாரம்பரியத்தின் அடுத்த வாரிசாக வந்துள்ள ஜீவன் தொண்டமான் மீது ஒரு பாரம் சுமத்தப்பட்டுள்ளது.

என்றாலும் மலையக மக்களுக்காக அவர் சேவையாற்றுவார் என நம்புகின்றோம் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.