நாட்டில் நீர் விநியோகத்தை சிறப்பாக முன்னெடுப்பதற்கு எதிர்வரும் வருடங்களில் 264 திட்டங்கள் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாக நீர் வழங்கல் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டங்களில் ஒரு தொகுதி 2021ஆம் ஆண்டும், எஞ்சிய தொகுதி 2022ஆம் ஆண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயகார தலைமையில் நேற்று (27) நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கருத்துத் தெரிவித்த அந்த அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம, தற்பொழுது 40 வீதமாகக் காணப்படும் நீர் விநியோகத்தை இத்திட்டங்களின் மூலம் 78 வீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகக் கூறினார்.

இதற்கமைய தற்பொழுது நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் 2.07 கனஅடி நீரை 4.47 கனஅடியாக உயர்த்த முடியும். இந்த சகல திட்டங்களும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர்களால் வடிவமைக்கப்பட்டு, உள்ளூர் நிதியைப்பயன்படுத்தி உள்ளூர் ஒப்பந்தகாரர்களினால் இதற்கான பணிகளை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நீரை வழங்குவது மாத்திரம் தமது நோக்கம் இல்லையென்றும், மக்களுக்கு தரமான நீரை வழங்குதே தாம் எதிர்பார்க்கும் நோக்கம் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயகார தெரிவித்தார். தமது அமைச்சின் கீழ் நீர் வளங்கள் சபை, நீர் வழங்கல் சபை மற்றும் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம் என்பன இதற்காக செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.