அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் குழு உறுதி செய்து அறிவித்தால், வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி உறுதியாகியுள்ள நிலையிலும், தற்போதைய அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் அதனை ஏற்கவில்லை. தேர்தலில் தனது தோல்வியை முறைப்படி ஏற்க அவர் மறுத்து வருகிறார்.

தேர்தலில், மொத்தமுள்ள 538 மக்கள் பிரநிதிதி வாக்குகளில், ஜோ பைடனுக்கு 306 வாக்குகளும், டிரம்ப்புக்கு 232 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதை அடுத்து, அந்நாட்டு வழக்கப்படி வரும் டிசம்பர் 14 ஆம் திகதி மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் கூடி ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்து அறிவிக்க உள்ளனர். புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா ஜனவரி 20 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

இதற்கிடையில் அதிகார மாற்றத்துக்கு அனுமதி மறுத்து வந்த டிரம்ப், பின்னர் மனம் மாறி இரண்டு நாள்களுக்கு முன் அதிகார மாற்றத்துக்கு ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், நிருபர்களிடம் டிரம்ப் வியாழக்கிழமை கூறியது: ஜோ பைடனின் வெற்றியை மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் குழு உறுதி செய்தால் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறுவீர்களா எனக் கேட்கிறீர்கள். அப்படி அவர்கள் அறிவித்தால், வெள்ளை மாளிகையைவிட்டு நிச்சயமாக வெளியேறுவேன். இதனை நீங்கள் அறிவீர்கள்.

ஆனால், ஜோ பைடனின் வெற்றியை அவர்கள் அங்கீகரித்தால், பெரிய தவறு செய்தவர்களாக ஆவார்கள். இந்தத் தேர்தலில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளது என்று டிரம்ப் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.