முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரின் வைரஸ் மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இதனால் இத்தொற்றாளருடன் தொடர்பை மேற்கொண்ட நபர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுக்குமாறு வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய வடமாகாண கொரோனா நிலைமைகள் தொடர்பில் நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்....

நேற்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 37 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நபர் தம்புள்ளை சந்தைக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்து வந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவரென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்குயிருப்பு பிரதேசத்தில் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது இந் நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் இப் பகுதியில் பல பொதுமக்களோடு தொடர்பிலே இருந்திருக்கின்றார்.

எங்களுக்கு கிடைத்த ஆய்வுகூட முடிவுகளை பார்க்கின்ற போது அவருக்கு ஏற்பட்டிருக்கும் கொரோனா மிகவும் வீரியமானதாக இருக்கின்றது.

எனவே அவரிலிருந்து பலருக்கு தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இதனால் அவரோடு தொடர்பிலே இருந்தவர்கள் தயவு செய்து உங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு பரிசோதனைகளை முன்னெடுப்பதன் மூலம் உங்களது பிரதேசத்திலே இந்த கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இதனை போன்றே வடமாகாணத்தில் இருக்கும் அனைத்து மக்களும் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களோடு தொடர்புகளை மேற்கொண்டிருந்தால் உடனடியாக உங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்பை மேற்கொண்டு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் வட மாகாணத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியுமென தெரிவித்துள்ளார்.

தினகரன்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.