இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன்  25 வருடங்களாகின்றன.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் 1996 ஆம் ஆண்டு என்றும் மறக்க முடியாத ஆண்டாக காணப்படுகின்றது.

ஆறாவது உலகக் கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டி பாகிஸ்தான் லாகூரில் 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி இடம்பெற்றது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இறுதிப்போட்டியில் பங்கேற்று விளையாடின.

இலங்கை கிரிக்கெட் அணி அர்ஜூன ரணதுங்க தலைமையிலும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி மாட் ரெயிலர் தலைமையிலும் போட்டியில் ஈடுப்பட்டன. போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி 46.2 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த உலக கிண்ண வெற்றியே இலங்கை கிரிக்கெட் அணியின் வரலாற்று மாபெரும் வெற்றியாகும். 

இந்த வெற்றியை முன்னிட்டு, 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அணியின் அனைத்து வீரர்களையும் இன்று காலை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கிண்ணத்தை வென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு, 25 ஆண்டு நிறைவை நினைவுகூறும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் உள்ள நினைவுப் பதக்கங்கள் மற்றும் நினைவு சின்னங்களை வழங்கப்படவுள்ளதுடன், ஒரு முத்திரையும் வெளியிடப்படவுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்து தனிமைப்படுத்தலில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இந்நிகழ்வில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் கலந்துக்கொள்ளவுள்ளார். (RH)

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.