இன்று (10) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்த கருத்துக்கள்.

ஓரிரு நாட்களில் ஏற்படவிருக்கும் சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை காலமும் நாடு கடந்த வந்த பாதையை நாங்கள் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். எமது நாட்டைவிட பின்தங்கியிருந்த மலேஷியா,சிங்கப்பூர் மற்றுமன்றி இன்று கொரியா,வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளும் எம்மை விட முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்று எமது நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு  பங்களாதேஷிடம் நிதி உதவி கோரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

நாங்கள் புரிந்து கொள்ள வேண்டியது பங்களாதேஷின் பொருளாதார அபிவிருத்தியைத் தான். ஏன் எமது நாடு அபிவிருத்தியடையாமல் போனது? உள் நாட்டுப் பிரச்சினைகளை குறைக்க முடியாததன் விளைவுகளைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.இவ்வாறு எம்மால் முன்னோக்கி செல்ல முடியாது. கட்சி அரசியலை ஒரு பக்கம் வைத்து விட்டு நாட்டின் முன்னேற்றம் பற்றி முற்போக்க சிந்திக்க அனைவரும் முன்வர வேண்டும். இல்லை என்றால் நாடு தொடர்ந்தும் பின்னோக்கிய நகர்வுகளுக்கே செல்லும். 

இன்று அரசியலில் வெறும் காட்சிகள் (Show) தான் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதைத் தாண்டிய ஒர் கொள்கை ரீதியான போக்கை காணமுடியாதுள்ளது. இன்று இந்த அரசாங்கத்தின் போக்கும் அவ்வாறே அமைந்துள்ளது. 

இன்று எமது நாட்டின் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் என்ன விடயங்களைப் பேசுகிறார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். சுவிடன் நாட்டில் அந்நாட்டு மக்களின் மகிழ்ச்சியை எவ்வாறு அதிகப்படுத்தலாம் என்று தான் பாராளுமன்றத்தில் அந்நாட்டு உறுப்பினர்கள் விவாதிக்கின்றனர்,கொள்கைகளை ஆலோசிக்கின்றனர்.சுற்றாடலை பாதுகாப்பதில் எந்தக் கட்சி முதலிடம் பெறுகிறது என்ற விடயத்தில் சுவிடனிலுள்ள  அரசியல் கட்சிகளிடையே போட்டித் தன்மையுள்ளது.இது தான் அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கும் எமது நாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளாகும். 

மலரவிருக்கும் புத்தாண்டுடனாவது கட்சி, அரசியல், இன, மத வேறுபாடுகளுக்கப்பால் நாட்டைக் கட்டியொழுப்ப கொள்கை ரீதியான அரசியலுக்குள் பிரவேசிக்குமாறு சகலருக்கும் அழைப்பு விடுக்கிறேன். ஒன்றித்து நாட்டை கட்டியொழுப்புவேம்.அத்தகைய நல்லெண்ணத்துடன் நாட்டிற்காக உறுதி பூணுமாறு வேண்டிக் கொள்கிறேன். அத்தகைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் நம்பிக்கையை மக்களுக்கு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி ஆயத்தமாகியுள்ளது. 

சந்தர்ப்பவாத அரசியல் கலாச்சாரத்தை நோக்கியும், இராணுவ ஆட்சியின் ஆரம்பத்தை நோக்கியும் சென்று கொண்டிருக்கும் நாட்டை மீளக் கட்டியொழுப்பும் பொறுப்பு எமக்குள்ளது. வியத்மக பற்றிப் பேசுகிறார்கள். மக்களுக்கு பயனற்ற பல வர்த்தமானிகளை நாளுக்கு நாள் இந்த அரசாங்கம் வெளியிட்ட வண்ணமுள்ளது.பின்னர் இரண்டு மூன்று நாட்களுக்குள் அரசாங்கத்தாலேயே அதே வர்த்தமானி மாற்றப்படுகிறது.கொள்கையும்,தெளிவான பார்வைகளுமின்றி பிரச்சினைகள் வந்தால் உடனடித் தீர்வாக சந்தர்ப்பவாத முடிவுகளை இந்த அரசாங்கம் மீண்டும் மீண்டும் எடுத்தவண்ணமுள்ளது.

நிலைபேறான பார்வைகள் இல்லாததாலேயே இத்தகைய பல வர்த்தமானியின் வருகை புலப்படுத்துகிறது.

இன்று ஆளும் கட்சியிலுள்ள விமல் வீரவன்ச ஒரு பக்கமாகியிக்கிறார்.அரசாங்கத்தை அமைக்க உதவிய சமூகக்  கொள்கை கொண்ட வாசுதேவ நாணாயக்கார போன்றவர்கள் ஒரு பக்கமாகியுள்ளார். பாராளுமன்த்தில் அங்கம் வகிக்காத பஷில் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினர்களை வழி நடத்துகிறார்.அதற்குரிய அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இத்தகைய ஜனநாயக விரோத போக்குகள் இராணுவ ஆட்சியை நோக்கிய ஆரம்பம் என்பதைக் காட்டுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியை நம்பிக்கையாகப் பாருங்கள்.உள்ளக ஜனநாயகமுள்ள கட்சி.வருடாந்தம் கட்சியின் தலைவரை தெரிவு செய்யும் முறைமை யாப்பிலுள்ளது.எமது கட்சியின் யாப்பை வாசித்துப் பார்க்குமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்று தெரிவித்தார்.உடனடித் தீர்வுகளுக்குப் பதிலாக கொள்கை ரீதியாக ஒன்றித்து புத்தாண்டுடன் தேசத்தைக் கட்டியொழுப்ப அனைவரும் முன்வர வேண்டும் எனத் தெரிவித்த அவர்,நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஏற்பட்டு வரும் ஆபத்து, அண்மையில் ஊடகவியலாளரின் கைது உள்ளிட்ட விடயங்கள் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். (Siyane News)

வீடியோ -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.