(பஸ்ஹான் நவாஸ்)
#SaveLakshadweep என்ற ஹேஷ் டக் உலக அளவில் trend ஆகி வருகிறது. பெரும்பாலும் லட்சதீவு பிரச்சினை பற்றி நீங்கள் அனேகமாக வாசித்திருப்பீர்கள்.
இலட்சத்தீவுகள் இந்தியாவின் மேற்குப் திசையில் அரபுக் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக் கூட்டமாகும். மொத்தமாக 36 தீவுகளை உள்ளடக்கிய தீவுகளின் கூட்டமே இலட்சத்தீவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இது ஒரு யூனியன் ஆள் புலப் பகுதி. அதாவது இந்திய மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வரும் பகுதியாகும்.
இங்கு வாழும் 96% அதிகமானவர்கள் முஸ்லிம்கள். ஷாபிஈ மத்ஹபை பின்பற்றுவர்கள். காதிரிய்யா ரிபாயிய்யா தரீக்காக்களின் கணிசமான செல்வாக்கும் உண்டு.
RSS சங்கிப் பாசறையில் வளர்ந்த Praful Khoda Patel என்பவரே இந்த மாநிலத்தின் தலைமை நிர்வாகி. மோடி நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர் இவர் இலட்சத்தீவுகளில் வசிக்கும் முஸ்லிம்களின அடையாளத்தை நசுக்கும் நோக்குடன் பல சதித்திட்டங்களை அமுல்படுத்தியுள்ளார்.
சங்கிக் கூட்டத்தின் அப்பட்டமான மனித உரிமை மீறலுக்கு எதிராகவே இலட்சத்தீவு மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளார்கள் என்பது தான் இதன் சுருக்கம்.
இனி விஷயத்துக்கு வருவோம். இலங்கைக்கும் இலட்சத்தீவுகளுக்கும் இடையிலான தொடர்புகள் மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகள் தாண்டியவை.
குறிப்பாக 19ம் நூற்றாண்டில் இலங்கையில் பௌத்த இஸ்லாமிய மறுமலர்சிப் பணிகள் வலுவடைந்தன. இந்தக் காலப் பகுதியில் இஸ்லாமிய மறுமலர்சிப் பணிகளுக்காக அதிகளவிலான சிந்தனையாளர்களும் ஆன்மீகத் தலைவர்களும் தென் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தார்கள்.
இதில் அதிகமான தங்கள்மார் இலட்சத்தீவுகளில் இருந்தும் கேரளாவிலிருந்தும் இலங்கை வந்தார்கள்.
இவர்கள் கொழும்பு, வெலிகம, காலி, கண்டி, கல்ஹின்ன, கெலிஒய, படுபிடிய, கல்முனை, உட்பட பல பகுதிகளுக்கும் சென்று மக்களுக்கு மத்தியில் ஆன்மீக மறுமலர்சிக்கான பணிகளை மேற்கொண்டார்கள். மேற்சொன்ன பகுதிகளில் இவர்கள் செய்த பணிகள் மகத்தானவை.
இதில் அஸ்ஸெய்யித் யசுப் கோயா தங்கள், அப்துல் ரஷீத் தங்கள், ஆத்தக் கோயா தங்கள், அஸ்செய்யித் புகாரி தங்கள் கன்னனூரா (டச்சுக்காரர்களின் ஆக்கிரமிப்பு எதிரான பல சுதந்திரப்போராட்டங்களில் பங்கேற்றவர்கள்), அஸ்ஸெய்யித் ஜிப்ரி தங்கள் போன்ற மகான்களை குறிப்பிடுவது அவசியமாகும்.
இவர்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் மேற்கொண்ட சமய மறுசீரமைப்புப்பணிகளின் பலன்களை இன்றும் கண்டுவருகிறோம். அவர்களின் வழிகாட்டல்களினால் நாம் பல உரிமைகளையும் வென்றெடுத்துள்ளோம்.
அவர்களின் பூர்வீக பூமியான இலட்சத்தீவுகளில் இருப்புக்கு இன்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கும் எமக்கும் இருக்கும் நெருக்மான தொடர்பை ஞாபகப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.
கருத்துரையிடுக