உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டித் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று (23) கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் ஆரம்பமானது.

இலங்கை சார்பாக இம்முறை ஒன்பது வீர வீராங்கனைகள் இதில் பங்குகொள்கிறார்கள். 1928 இல் இருந்து இலங்கை மெய்வல்லுனர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிவருகின்றனர்;. இதனைத்தொடர்ந்து 1948 இல் பங்குகொண்டார்கள், முதன் முதலில் Duncan White  இலங்கைக்கு ஒலிம்பிக்கை போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை பெற்றார். இவர் இலண்டனில் 1948 ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400மீ தடை தாண்டலில் இரண்டாம் இடத்தைப்பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் 1952, 1956, 1960, 1964, 1968, 1972, 1980, 1988, 1992, 1996, 2000, 2004, 2008, 2012 மற்றும் 2016 என இலங்கை வீரர்கள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிட தக்கது.

1976, 1984 ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் இலங்கை சார்பில் எவரும் பங்குகொள்ளவில்லை.

கேகாலை மாவட்டத்தைச்சேர்ந்த சுஷந்திகாவினால் மீண்டும் ஒரு வெள்ளி பதக்கம் 2000 ஆண்டு சிட்னியில் 200மீற்றர் ஓட்ட போட்டியில் இலங்கைக்கு கிடைத்தது. இது 1948 ஆம் ஆண்டுக்குப்பின்னர் இலங்கைக்கு கிடைத்த பதக்கமாகும்.

தமயந்தி தர்ஷா, சிரியானி குலவன்ஷ, சுகத் திலகரட்ன, ரோஹன் பிரதீப்குமார போன்ற பல சர்வதேச புகழ் பெற்ற வீரர்கள் ஒலிம்பிக் தொடர்களில் பங்கு பற்றியிருந்தார்கள்.

இதே வேளை ,இம்முறை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பட்மின்டன் தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்றும் சந்தர்ப்பம் ஊவா மாகாணத்தின் பசறை தமிழ் மகா வித்தியலாத்தில் (தேசிய பாடசாலை) உடற்கல்வி ஆசிரியையாக கடமையாற்றும் மாரிமுத்து அகல்யாவுக்கு கிடைத்துள்ளது. .

ஒலிம்பிக் விளையாட்டு விழா வரலாற்றில் தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்றுவதற்கு தெரிவாகியுள்ள முதலாவது இலங்கை தமிழர், மாத்திரமின்றி மலையகத்திற்கு வரலாற்று சாதனையின் சின்னமாக மாரிமுத்து அகல்யா இன்று விளங்குகிறார்..
.
அதேபோன்று, குத்துச் சண்டை போட்டிகளுக்கான நடுவராக இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியின் பெண் நடுவராக நெல்கா ஷிரோமளா தெரிவு செய்யப்பட்டுள்ளார்

ஒலிம்பிக் நிகழ்வுகளை இலங்கையில் ரூபவாஹினி மற்றும் சனல் ஐ அலைவரிசைகள் மற்றும் சோனி பிக்சர்ஸ் வலையமைப்பின் அலைவரிசை ஊடாக பார்வையிடலாம்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டி, கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால், ஜப்பான் மக்கள் இந்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில், அந்நாட்டு அரசும் சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பும் உறுதியுடன் செயல்பட்டு போட்டியை நடத்துகின்றனர்.

மொத்தம் 205 நாடுகளை சேர்ந்த 11,683 வீரர், வீராங்கனைகள் 33 போட்டிகளில் தலா 339 தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுக்காக திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டிக்கான ஆரம்ப விழா, தேசிய ஸ்டேடியத்தில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலால் ஜப்பான் முழுவதும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிறப்பு அழைப்பாளர்களாக ஆயிரம் பேர் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்றனர். வேகமாக, உயர்வாக, வலுவாக ஒற்றுமையாக ஒருங்கிணைந்து முன்னேறுவோம் என்ற கருத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட தொடக்க விழாவை, ஜப்பான் மன்னர் நாருஹிடோ முறைப்படி தொடங்கி வைத்தார். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை பிரதிபலிக்கும் டோக்கியோ ஒலிம்பிக் சின்னம் திறந்து வைக்கப்பட்டது. ஏராளமான ட்ரோன்கள் ஸ்டேடியத்தை வட்டமிட்டு உலகப் பந்து மிதப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.

அணிவகுப்பு: போட்டியில் பங்கேற்கும் 205 நாடுகளை சேர்ந்த குழுவினரும் தங்கள் நாடுகளின் தேசியக் கொடியை ஏந்தி தொடக்க விழா அணிவகுப்பில் கலந்து கொண்டனர். கொரோனாவால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வீரர், வீராங்கனைகளே இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இந்தியக் குழுவினர் ஆண்கள் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் அணிவகுத்து வந்தனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் நிர்வாகக் குழு தலைவர் ஹஷிமோட்டோ சீகோ, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் இருவரும் மிகுந்த சிரமத்துக்கிடையே இந்த தொடரை நடத்துவது குறித்தும், பெருந்தொற்று காலத்தில் உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினர்.

ஸ்காட்லாந்து பாடகி சூசன் மெக்தலேன் போய்ல் தனது புகழ்பெற்ற 'பறப்பதற்கான சிறகுகள்' என்ற பாடலை இசைக்க, 'லேசர்' புறாக்கள் அரங்கில் இருந்து சுதந்திரமாகப் பறந்து சென்றது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகளைக் குறிக்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் அதிசயிக்க வைத்தன.ஒலிம்பிக் சுடர்: ஒலிம்பிக் கீதம் முழங்க கொடியேற்றப்பட்ட பின்னர், புகுஷிமாவில் இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி தொடங்கி 2000க்கும் மேற்பட்ட பல துறை பிரபலங்களால் டோக்கியோ நகருக்கு எடுத்து வரப்பட்ட ஒலிம்பிக் சுடர், பலத்த ஆரவாரத்துக்கிடையே ஸ்டேடியத்துக்குள் கொண்டுவரப்பட்டது. பாடசாலை மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சுடரை அவர்கள் அரங்கை சுற்றி வந்து ஜப்பான் டென்னிஸ் நட்சத்திரம் நவோமி ஒசாகாவிடம் ஒப்படைத்தனர்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இதுவரை 4 சாம்பியன் பட்டங்களை வென்ற சாதனையாளரான ஒசாகா, சமீபத்தில் மனச்சோர்வு காரணமாக செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்ததுடன் பிரெஞ்ச் ஓபன் தொடரில் இருந்தும் விலகியது குறிப்பிடத்தக்கது. நிறவெறிக்கு எதிராக தனது கருத்துகளை தொடர்ந்து துணிச்சலாக வெளிப்படுத்தி வரும் அவருக்கு, ஒலிம்பிக் சுடரை ஏற்றும் மிகப் பெரிய கவுரவம் வழங்கப்பட்டது மிகப் பொருத்தமானதாக அமைந்தது. ஒலிம்பிக் போட்டிகள் முறைப்படி தொடங்கியுள்ள நிலையில் வீரர், வீராங்கனைகள் பதக்க போட்டிகளில் மும்முரமாகக் களமிறங்குகின்றனர். ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதில் இலங்கை குழுவினருக்கு களமிறங்கியுள்ளனர்.
125 பேர் அடங்கிய இந்திய குழுவினரும், பதக்கங்களை வெல்வதில் களமிறங்கியுள்ளனர்.

தொடக்க விழாவில், உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் 8ம் ஆம் திகதி டோக்கியோ ஒலிம்பிக் நிறைவடைகிறது.

-அரசாங்க தகவல் திணைக்களம்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.