(றாசிக் நபாயிஸ்)

அம்பாறை மாவட்டம் இறக்காமத்தினைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் பிரதி அதிபருமான எஸ்.எல்.எம்.பிக்கீர் (59) நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) காலமானார்.

இவர், கல்வியாளராகவும் மற்றும்; ஊடகவியலாளராகவும் நீண்டகாலமாக சேவையாற்றிய சிறந்ததொரு மனிதர். இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களிடையே நல்லுறவை கட்டியெழுப்புவதில் இவருடைய ஊடகப் பங்களிப்பு அதிகமாக இருந்திருக்கிறது என அம்பாறை மாவட்ட  ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர் தனது அனுதாப அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் தனது அறிக்கையில், மிகவும் துடிதுடிப்பான ஊடகவியலாளரான இவர், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் பிரதித் தலைவராக இருப்பதுடன் ஊடகம் மற்றும் கல்விசார் பல்வேறு சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளில் முன்னிலையில் நின்று பணியாற்றிய ஒருவர். அவரது இழப்பு ஊடகம் மற்றும் கல்விச் சமூகத்தின் நிரப்ப முடியாத இடைவெளியாகும்.

இறக்காமத்தின் முதுசம், முதல் ஊடகவியலாளர், தமிழ்மொழி வித்துவான், ஆய்வாளர், எழுத்தாளர் மற்றும் கலைஞர் என பல ஆளுமைகளைக் கொண்டுள்ள இவர், இறக்காமத்துக்கு தனியான பிரதேச செயலகம் வேண்டும் என முதல் முதல் குரல் கொடுத்த முதுசம். இறக்காமத்தின் சகல அபிவிருத்தி வேலைகளிலும் தன்னை அர்ப்பணித்த ஒரு மகான். இறக்காமத்தின் ஊடகங்கள் அதேபோல் இலக்கியத்துறை வளர்வதற்கு தன்னை அர்ப்பணித்த ஓர் அன்பாளர்.

இறக்காம பிராந்திய வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்து ஆரம்ப காலம் முதல் மரணிக்கும் வரை இந்த மண்ணுக்காக தன்னை அர்ப்பணித்த ஓர் இலக்கியவாதி. தனது ஊடக ஆளுமையின் மூலம் தனது ஊர் இறக்காமத்தின் பெயரை தேசம் அறிய வைத்தவர்களில் ஒருவர். சக்தி டீவி, தினகரன் உள்ளிட்ட பல்வேறு அச்சு, இலத்திரனியல், இணையத் தள ஊடகங்களில் சேவையாற்றிவர். 

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக சகல ஊடக நண்பர்களும் பிரார்த்திப்பதுடன் அம்பாறை மாவட்ட  ஊடகவியலாளர்கள் சம்மேளனம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.