எம்.றொசாந்த் 

புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்றைய தினம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இவர் பொலிஸாரினால்  ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்யும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகியது. புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்  புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 மற்றும் 35 வயதுடைய இருவரை கைது செய்தனர். 

நாயை வெட்டிக் கொல்லப் பயன்படுத்தி கைக்கோடாரி மற்றும் அதனை காணொளி எடுத்த அலைபேசி என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

"போதைப்பொருளுக்கு அடிமையாகியதால் ஊரில் திருட்டுகளில் ஈடுபட்டோம். எம்மைக் கண்டவுடன் நாய் குலைத்து காட்டிக்கொடுத்துவிடும். இதனால் அங்கு இடம்பெறும் திருட்டுகளுடன் எமக்குத் தொடர்பு உண்டு என பொலிஸார் விசாரணைக்கு அழைப்பார்கள். அதனால்தான் அந்த நாயைக் கொலை செய்தோம்” என்று கூறியுள்ளனர்.

சந்தேக நபர்களை சட்ட மருத்துவரின் முன் முற்படுத்தி அறிக்கை பெற்ற பின் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் முதன்மைச் சந்தேக நபர் கிளிநொச்சியில் தலைமறைவாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை முதன்மை சந்தேக நபர்  ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.