பாரம்பரிய இராஜதந்திர முறைக்குப் பதிலாக பொருளாதார இராஜதந்திரத்திற்கு உலகில் முன்னுரிமை கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

 இலங்கையின் புதிய தூதுவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் இன்று (டிசம்பர் 26) அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  இந்த கலந்துரையாடலில் 16 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் கலந்துகொண்டனர்.

 முதலீட்டை ஈர்ப்பதற்கும், ஏற்றுமதி மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், நடுநிலையான, அணிசேரா நாடு என்ற நற்பெயரை மேம்படுத்துவதற்கும், அனைவருக்கும் நட்புறவுடன் செயல்படுவதற்கும் தாம் பாடுபடுவதாக  புதிய தூதுவர்களிடம் பிரதமர் தெரிவித்தார்.

 நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், முதலீடுகள், கூட்டு முயற்சிகள் மற்றும் இருதரப்பு கூட்டாண்மைக்காக உழைக்குமாறு இலங்கை தூதுக்குழுக்களிடம் கேட்டுக் கொண்டார்.

 அதிக முதலீடுகள், வேலை வாய்ப்புகள் மற்றும் மேம்பாட்டு உதவிகளைப் பெறுவதற்கு புலம்பெயர்ந்த சமூகம் மற்றும் அவர்களது சங்கங்களுடன் நாம் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும்.  இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சியை அடைந்து தன்னிறைவு அடைவதற்கும் விவசாயம், கைத்தொழில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நட்பு நாடுகள் ஒத்துழைக்க முடியும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட முதலீட்டு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுக்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறும் பிரதமர் குணவர்தன வலியுறுத்தினார்.

 புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்களான முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் சித்ராங்கனி வகேஸ்வரா (ஆஸ்திரேலியா), முன்னாள் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே (இந்தோனேசியா), மனிஷா குணசேகர (பிரான்ஸ்), எச்.எம்.ஜி.ஆர்.கே.  மெண்டிஸ் (பஹ்ரைன்), டாக்டர் ஏ.எஸ்.யு.  மெண்டிஸ் (வியட்நாம்), வருணி முத்துக்குமரன (ஜெர்மனி), கபில ஜயவீர (லெபனான்), எம்.எச்.எம்.என்.  பண்டார (இஸ்ரேல்), கே.கே.தெஷாந்த குமாரசிறி (எத்தியோப்பியா), கலாநிதி சானக எச்.தல்பஹேவா (பிலிப்பைன்ஸ்), பிரியங்கா விஜேகுணசேகர (ஜோர்டான்), பி.காண்டீபன் (குவைத்), ஹிமாலி அருணதிலக்க (ஜெனீவா), உதய இந்திரரத்ன (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) மற்றும் சண்டி எமிரேட்ஸ் சமரசிங்க (கான்சல் ஜெனரல்-மெல்பேர்ன்) உற்பட மற்றும் பலர் இணைந்தனர்.

 - பிரதமர் ஊடகப் பிரிவு -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.