இந்தியா, ஆப்கானிஸ்தான், துருக்கியில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இன்று அதிகாலை வேளையில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதை நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) உறுதிபடுத்தியுள்ளது. அதன்படி, இன்று பிப்ரவரி 13ஆம் திகதி அதிகாலை 4.15 மணியளவில் சிக்கிமின் யுக்சோம் பகுதியில் இருந்து 70 கிமீ தூரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இருந்தது.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி என்பது, அட்சரேகை 27.81 மற்றும் தீர்க்கரேகை: 87.71, என்று குறிப்பிட்டுள்ளது. மாநிலத்தின் தலைநகர் கங்டோக்கில் இருந்து 116 கிமீ தொலைவில் இந்த யுக்சோம் நகர் உள்ளது. அங்கிருந்து 70 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித உயிர்சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை.

அதேவேளை, நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். மற்றொரு வடகிழக்கு மாநிலமான அசாமிலும் நேற்று மாலை இதுபோல லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதேவேளை, ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகரிலிருந்து 135 கிமீ தெற்கே-தென்கிழக்கில் இன்று காலை 6.47 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியுள்ளன. அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகலை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஃபைசாபாத் நகரில் பதற்றம் நிலவியது.

அதேபோல், துருக்கியில் நேற்றிரவு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துருக்கியின் காரமன்மராஸ் பகுதியில் 4.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் உச்சக்கட்ட அச்சத்தில் துருக்கி மக்கள் உள்ளனர்.

துருக்கி - சிரியா எல்லையை மையமாகக் கொண்டு கடந்த வாரம் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்தில் சுமார் 34,000 மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் பெரும் பாதிப்பை கண்டனர். அப்படியிருக்க வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.