ஆளுநர்கள் இங்கு மட்டுமல்ல இலங்கையில் எப்பாகத்திலுமே தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி அத்துமீறல் செய்து இனவாதத்தை ஏற்படுத்தக் கூடாது. 

ஆளுநர்  உத்தரவின் பேரில் அகற்றப்பட்ட  புன்னைக்குடா வீதி பெயர்ப்பலகை அமைச்சர் நஸீர் அஹமட்டினால் மீள நடப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர்  அனுராதா யஹம்பத்தின் உத்தரவின் பேரில் “எல்மிஸ் வல்கம” வீதி என சிங்களப் பெயராக மாற்றுவதற்காக அகற்றப்பட்ட  புன்னைக்குடா வீதி எனும் பெயர்ப்பலகை அதே “புன்னைக்குடா வீதி” என்ற பழைய நாமத்தோடு அமைச்சர் நஸீர் அஹமட்டினால் மீள நடப்பட்டது. இந்நிகழ்வு  ஏறாவூர் நகர புன்னைக்குடா வீதி சந்தியில் திங்கள்கிழமை 10.04.2023  இடம்பெற்றது.

அங்கு உரையாற்றிய அமைச்சர் நஸீர் அஹமட், ஆளுநர்கள் இங்கு மட்டுமல்ல இலங்கையில் எப்பாகத்திலுமே தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி அத்துமீறல் செய்து இனவாதத்தை ஏற்படுத்தக் கூடாது. கிழக்கு மாகாண ஆளுநர் தன்னிச்சையாகத் தீர்மானம் எடுத்து இனமுரண்பாடுகளை உருவாக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்” என்றார். 

ஆளுநரின் உத்தரவு வெளியானதை அடுத்து ஏற்கெனவே ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்லும் கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும்  அறிவித்தலாக அமைக்கப்பட்டிருந்த புன்னைக்குடா வீதி என்ற பெயர்ப் பலகை உடனடியாக அகற்றப்பட்டிருந்தது. இந்த அறிவித்தல் வெளியாகி ஏறாவூரில் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான நஸீர் அஹமட், பாரம்பரியமாக புன்னைக்குடா வீதி என இருந்து வரும் பெயரை எக்காரணம் கொண்டும் எவரையும் மாற்ற அனுமதிக்கப்போவதில்லை என சூளுரைத்திருந்தார்.

அத்தோடு, ஆளுநர் தனது அதிகார எல்லையை மீறுவதைக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.