டீசல் விலை குறைந்தால் மட்டுமே பஸ் கட்டணம் குறையும்!

எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் பஸ்கட்டணங்களை குறைப்பதானால், டீசல் லீற்றருக்கு மேலும் 20 ரூபாவால் குறைக்கப்பட வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விலை குறைப்போடு ஒப்பிடும்போது பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என்றும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, குறைக்கப்பட்ட எரிபொருள் விலைக்கு ஏற்ப, பஸ் கட்டணத்தை குறைக்க முடியுமா என்பது தொடர்பில், கணிப்பீடு ஒன்றை மேற்கொண்டு வருவதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரென்டா அது தொடர்பில் தெரிவிக்கையில், மேற்படி கணிப்பீட்டு நடவடிக்கைகள் நிறைவுற்றதும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியுமா என்பது தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என்றார்.

அதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, தற்போது குறைக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைக்கேற்ப, பஸ் கட்டணத்தைக் குறைப்பதற்கான வாய்ப்பு கிடையாது, அவ்வாறு பஸ் கட்டணம் குறைக்கப்படுமானால் பஸ் போக்குவரத்து சேவையிலிருந்து விலகிக்கொள்ள நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.