நியூ டயமண்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்கள் குறித்து ஆராய விசேட தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரி சபாநாயகருக்கு கடிதம்


⏩ இலங்கை கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள நியூ டயமண்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்கள் குறித்து உண்மைகளை ஆராய்ந்து தேவையான பரிந்துரைகளை வழங்க பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவை நியமிக்குமாறு சபாநாயகருக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் 21 பேர் கடிதம்...


இலங்கை கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள நியூ டயமண்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ல் விபத்துக்கள் தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 பேர் கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவை உடனடியாக நியமிக்குமாறு ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று இன்று (9) கையளிக்கப்பட்டது.

ஜயந்த கடகொட, சஞ்சீவ எதிரிமான்ன, யதாமினி குணவர்தன, டபிள்யூ.டி.வீரசிங்க, ரஞ்சித் பண்டார, மதுர விதானகே, ராஜிகா  விக்கிரமசிங்க, குணதிலக்க ராஜபக்ஷ, குமாரசிறி ரத்நாயக்க, ஜகத் குமார, மஹிந்தானந்த அலுத்கமகே, சம்பத் அத்துகோரல, நாலக கொடேகொட, சுதர்சன தெனிபிட்டிய, கே.ஏ.யு.கே. குணதிலக, நிமல் லான்சா, எச்.எம்.எம் ஹரீஸ், சரத் வீரசேகர, முதித டி சொய்சா, எஸ்.பி.திஸாநாயக்க, பிரதீப் உந்துகொட ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள்  இது தொடர்பான கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

கப்பல் விபத்துக்கள் மற்றும் விபத்துக்களின் பின்னர் ஏற்பட்ட தலையீடுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து சமூகத்தில் பெரும் விவாதங்கள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த கடிதத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த விபத்துக்கள் மற்றும் கப்பல் காப்புறுதி நிறுவனங்களுக்கிடையே இடம்பெற்ற பரிவர்த்தனைகள் குறித்து சபைக்கு உள்ளேயும் வெளியேயும் வெளிப்படுத்தியதாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் விபத்துக்கள் தொடர்பான உண்மைகள் வெளிவர வேண்டியிருப்பதால், இது தொடர்பில் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தில் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கப்பல் விபத்துக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள நிதிக் குற்றச்சாட்டை அடக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் விவாதம் கோருவதாக தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் முயற்சிகளை முறியடிக்கும் நோக்கில் ஆளும் கட்சி இந்த விசேட தெரிவுக்குழுவை நியமிக்குமாறு சபாநாயகரிடம் கோரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கப்பல் விபத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, கப்பல் விபத்துக்களில் நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அண்மையில் பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தினார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.