பாறுக் ஷிஹான்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு, மீண்டும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.
குறித்த வழக்கு, கல்முனை நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இரு வேறு சந்தர்ப்பங்களில், இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த சில வாரம் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனைவரும் சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய, வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த பின்னர், மீண்டும் இன்று விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
பொலிஸாரின் ஆட்சேபனை காரணமாக அனைத்து சந்தேகநபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு, இவ்வழக்கு விசாரணை, இம்மாதம் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதான சந்தேகநபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இதில் கல்முனை, சாய்ந்தமருதில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய சந்தேகநபர்களும் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

