ராஜபக்சர்களை வீழ்த்தக்கூடிய ஒரே அணி ஐக்கிய மக்கள் சக்தி - பொன்சேகா

Rihmy Hakeem
By -
0


(ஆர்.யசி)

நாட்டின் பிரதான குற்றவாளிகளும், ஊழல்வாதிகளுமே இன்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச சதிகள் நாட்டிற்கு எதிராக இடம்பெறுவதாக கூறி நாட்டினை சர்வதேசத்திற்கு விற்கும் நடவடிக்கையை ராஜபக்ஷக்கள் முன்னெடுத்து வருகின்றனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒன்று நேற்று தொம்பே பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ராஜபக்ஷக்களின் அரசாங்கதை வீழ்த்தும் சக்தி ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ளது. எமது ஆட்சி பலவீனமடைய எமது தலைமைத்துவமே காரணமாகும். எமது ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில் இடம்பெற்ற தவறுகளை எமது தலைமைகள் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியில் தலைமைத்துவம் கட்சியின் உறுப்பினர்களுடன் முரண்பட்ட காரணத்தினாலும் அரசாங்கத்தை பலவீனப்படுத்த தலைமைத்துவமே செயற்பட்ட காரணத்தினாலேயே ஐக்கிய மக்கள் சக்தி என்ற தனிக்கட்சியை உருவாக்க நேர்ந்தது. இதற்கு ரணில் விக்கிரமசிங்கவும் அவருடன் இருந்த பிரதான தலைமைகலுமே காரணமாகும்.

இன்று ஐக்கிய தேசிய கட்சியுடன் உள்ள அனைவரும் ஊழல்வாதிகள், குற்றவாளிகள். அவர்கள் இந்த நாட்டில் அங்கீகாரம் ஒன்றினை பெற்றுக் கொள்ள முடியாது. ரணில் விக்கிரமசிங்கவுடன் இனியும் பயணிக்க முடியாது. அத்துடன் ராஜபக்ஷக்களை வீழ்த்தக்கூடிய ஒரே அணியும் எமது அணி என்பதை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல இந்த அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. தவறான வழியில் இந்த அரசாங்கம் பயணித்துக் கொண்டுள்ளது. தகுதியான நபர்களுக்கு இடம் வழங்கப்படும் என கூறியவர்கள் முழுமையாக இராணுவத்தை பலப்படுத்தி வருகின்றனர். குடும்ப ஆட்சியை மேலும் பலப்படுத்தியுள்ளனர்.

நாட்டினை கட்டியெழுப்புவதாகவும், விவசாயிகளை பாதுகாப்பதாகவும் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆனால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது நாடு சர்வதேசத்திற்கு விற்கப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

கருணா இராணுவத்தை கொன்றது தவறில்லை, உலகக் கிண்ண கிரிகெட் போட்டியில் ஊழல் இடம்பெற்றதாக கூறுவது தவறில்லை, ஆனால் நாம் அரசியல் செய்வது சர்வதேச சதியென கூறுகின்றனர். இந்த நாட்டினை பிரதான குற்றவாளிகள் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். நாட்டினை நேசிப்பதாக கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)