பெயர் குறிப்பிடப்பட்ட பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 16ஆம் திகதி பாடசாலை ஆரம்பம்

Rihmy Hakeem
By -
0

 2025.12.09


பெயர் குறிப்பிடப்பட்ட பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை ஆரம்பம் 2025 டிசம்பர் 16ஆம் திகதி.


மூன்றாம் தவணைப் பரீட்சை நடைபெறாது - 11ஆம் தரத்திற்கு மாத்திரம், முன் பரீட்சைப் பயிற்சி நடத்தப்படும்.


க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் இதுவரை நடத்தப்படாத ஏனைய பாடங்களுக்கான பரீட்சைகள் அடுத்த வருடம் ஜனவரி 12ஆம் திகதியிலிருந்து நடத்தப்படும்.


ஆசிரியர், அதிபர் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்காக பாடசாலை ஆரம்பம் டிசம்பர் 15ஆம் திகதி.


நாட்டினைப் பாதித்த சீரற்ற காலநிலை காரணமாகப் பாடசாலைக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட பாதிப்பு, அதனை மீள வழமை நிலைக்குக் கொண்டுவருதல், 2025ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைப் பாடசாலைக் காலத்தின் இரண்டாம் பகுதியின் ஆரம்பம் மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையை நடத்துதல் போன்ற பல அடிப்படை விடயங்களை மையப்படுத்தி கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக களுவெவ இன்று (09) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.


இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், தற்போது நாட்டின் அனைத்து மாகாணங்களுடனும் ஒருங்கிணைந்து நிலைமையை மீளாய்வு செய்ததற்கு அமைய, நாடளாவிய ரீதியில் உள்ள 10,076 பாடசாலைகளில் 9,929 பாடசாலைகள் 2025.12.16ஆம் திகதி திறக்கப்படும் என்றார்.


அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட 147 பாடசாலைகள் தற்போது ஆரம்பிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், மாகாண ரீதியாக வழங்கப்படும் மேலதிக உறுதிப்படுத்தல்களின்போது ஏற்படக்கூடிய எண்ணிக்கை ரீதியான மாற்றங்கள் குறித்துத் தொடர்ச்சியாக உத்தியோகபூர்வ அறிவிப்புகள் விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


அத்துடன், டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பமாகும் அனைத்துப் பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் டிசம்பர் 15ஆம் திகதி சேவைக்குச் சமூகமளிக்க வேண்டும் என்றும், அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் சீருடை தொடர்பில் நெகிழ்வுத்தன்மை பின்பற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.


மேலும், 2025ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக் காலத்தின் இரண்டாம் கட்டம் 2025.12.16ஆம் திகதி முதல் 2025.12.22ஆம் திகதி வரையும், கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் 2025.12.29ஆம் திகதி முதல் 2025.12.31ஆம் திகதி வரையும், முஸ்லிம் பாடசாலைகள் 2026.01.02ஆம் திகதி வரையும் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் நடாத்தப்படாத ஏனைய பாடங்கள் 2026 ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும், அது தொடர்பான மேலதிக அறிவிப்புகளைப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.


2026ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 05ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும், சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி பெப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.


















கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)