![]() |
| படம் - AI |
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பின்படி, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,000ஐத் தாண்டியுள்ளது.
அதற்கமைய, இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,406 ஆக இருக்கும் அதேவேளை, டெங்குவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1,024 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தற்காலிகப் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் மாதத்தில் மாத்திரம் 21,565 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களுள் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாவட்ட ரீதியாக, கொழும்பு மாவட்டத்தில் 11,392 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 11,006 நோயாளர்களும் பதிவாகியிருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.
பொதுமக்கள் தற்போதும் நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதில் போதிய கவனம் செலுத்தாததே டெங்கு பரவல் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் என வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமாயின், வீடுகள், பாடசாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களைச் சுற்றியுள்ள நுளம்புகள் பெருகும் இடங்களை முழுமையாக அகற்றுவது அத்தியாவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேபோல், தற்போது அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளைச் சூழவே டெங்கு நோய் அதிகமாகப் பரவி வருவதால், அது குறித்து விசேட கவனம் செலுத்துமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
(கம்பஹா நியூஸ்)

