திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் Coalition for Inclusive Impact (CII) என்பவற்றின் ஏற்பாட்டில் "Voice to Policy Dailogue" பிராந்திய மட்ட செயலமர்வு தொடரின் முதலாவது நிகழ்வு நேற்றைய தினம் (16) கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்தை இலக்காகக் கொண்டு நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு இளைஞர், யுவதிகள் தங்களது பிரச்சினைகளை நேரடியாக முன்வைத்தல் மற்றும் அதற்கான கொள்கை ரீதியான தீர்வுகளைப் பரிந்துரைப்பதற்கான வாய்ப்புக்களையும் வழங்கியிருந்தது.
கல்வி மற்றும் திறன்கள், செயற்கை நுண்ணறிவு, உட்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, அரசியல் பங்கேற்பு, முயற்சியாண்மை / வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக இளைஞர்கள் தங்களது பிரச்சினைகளைகள் மற்றும் எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்துகொண்டதுடன் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளையும் முன்மொழிந்தனர்.
நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத்தலைவர்களான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் க்ரிசாந்த அபேசேன மற்றும் சாணக்கியன் ராசமாணிக்கம் எம்பி, எம்பிக்களான சமிந்த்ராணி கிரியெல்ல, எஸ்.எம்.மரிக்கார், பிரகீத் மதுரங்க, ஜி.டி.சூரிய பண்டார மற்றும் சம்பிக்க ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த, பல்வேறு கட்சிகளின் இளம் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின் இளம் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், தொழில் முயற்சியாளர்கள், உயர்கல்வி கற்கும் மாணவர்கள் என 65 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் இந்நிகழ்வில் பங்குபற்றியமை விஷேட அம்சமாகும்.
"இந்த முயற்சி நீர்கொழும்புடன் முடிவடைவதல்ல. இளைஞர்களின் குரலை நேரடியாகக் கேட்டு, அவர்களின் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளை கொள்கை உருவாக்கத்துடன் இணைக்கும் வகையில், இவ்வாறான “Voice to Policy Dialogue” கலந்துரையாடல்களை எனது முயற்சியின் ஊடாக நாடு முழுவதும் தொடர்ந்து நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறேன்.
நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் இளைஞர்களின் குரல், நாட்டின் கொள்கை உருவாக்கத்திலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு" என்று குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.












