எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது ஜனாதிபதித் தேர்தலின் தபால்மூல வாக்கெடுப்பு இன்றும், நாளையும் இடம்பெறும்.

காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அரச அதிகாரிகள் தமது வாக்குகளை அளிக்க முடியும்.

இதற்காக 7,920 வாக்களிப்பு நிலையங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அமைக்கப்பட்டுள்ளன. தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அவர்களது நிறுவனத்திலே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆறு லட்சத்து 59 ஆயிரத்து 30 பேர் தபால்மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தபால்மூல வாக்கெடுப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்தார்.

தபால்மூலம் வாக்களிப்பதற்காக ஏழு லட்சத்து 17 ஆயிரத்து 871 அரச ஊழியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 58 ஆயிரத்து 841 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்றும், நாளையும் வாக்களிக்க முடியாதவர்களுக்கு நவம்பர் மாதம் 7ஆம் திகதி தெரிவத்தாட்சி அலுவலகங்களில் வாக்குகளை செலுத்த முடியும் என திரு ரட்நாயக்க குறிப்பிட்டார். வாக்களிப்பு இடம்பெறும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களுக்காக சுமார் ஆயிரம் கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

அதிவிசேட பாதுகாப்பு கோரப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு மேலதிக பாதுகாப்புகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகளங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், அடிக்கடி பொலிஸார் ரோந்து நடவடிக்கைளில் ஈடுபடவும் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.