2020 – உயர் தர பரீட்சை எழுதும் 
அன்பின் மாணவர்களே…!

கடந்த இரண்டு வருடங்களாக பல சங்கடங்களை, சவால்களை சந்தித்து இப்போது பரீட்சைக்கு நீங்கள் முகம் கொடுப்பதற்கு தயாராக இருப்பீர்கள். இதற்கு முன்பு மாணவர்கள் காணாத தடைகளை நீங்கள் கண்டு அவற்றை வாழ்க்கையில் நல்லதொரு அனுபவமாக மாற்றியமைத்திருப்பீர்கள். 

"உங்கள் பரீட்சை இலகுவாகவும் நல்ல முடிவை தரக்கூடியதாகவும் அமைய மனம் திறந்து பிரார்த்திக்கிறோம்"

பாடங்களைப் படித்து பரீட்சைக்கு தயாராக இருக்கும் நீங்கள் மனதாலும் தயாராக வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். எந்த ஒன்றை சாதிப்பதற்கும் மனபலம் முதன்மையானது என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆதலால் நேர்மறையான மனப்பாங்குடன் இந்தப் பரீட்சைக்கு முகம் கொடுப்போம். அப்படி முகம் கொடுத்தால் உங்கள் மனதை திறந்துகொள்ளவும் உடல் அமைதியடையவும் கற்றுக்கொண்டதன் மீது கவனம் செலுத்தவும் காரணமாக அமைந்துவிடும்.

அன்பின் மாணவர்களே…!

‘நேர்மறையான மனப்பாங்கு என்பது நாம் செய்யப்போகும் விடயங்கள் பற்றி சாதகமாக சிந்திப்பதன் மூலம் எம் வாழ்க்கையை நலவின் பக்கம் மாற்றிக்கொள்வதைக் குறிக்கும்’. எனவே ...

எங்களை நாம் எமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வோம் 

எமது ஆற்றல்கள் மீது நம்பிக்கை வைப்போம் 

எங்களுக்காக எங்களை நேசிப்போம் 

‘என்னால் முடியும்’, ‘நான் முகம் கொடுப்பேன்’ என்று உறுதியாக நம்புவோம்

எங்களை நாங்களே வாழ்த்திக்கொள்வோம் 

பரீட்சையின் போது சில சமயம் பயம் மற்றும் மனக்குழப்பம் என்பன ஏற்படலாம். அந்த நேரத்தில் கவலைப்படவோ பதட்டப்படவோ கூடாது. நாம் முகம் கொடுக்க சங்கடப்படும் விடயங்களில் இருந்து எம்மைக் காப்பாற்றிக்கொள்ள விரைவான நடவடிக்கை எடுக்க இது போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் துணைபுரிகின்றன. நம்மைச் சுற்றியுள்ள பிற விடயங்களால் மனம் திசை திருப்பப்படுவதையும் தடுக்க அவை உதவுகின்றன. உறுதியாகவும் உற்சாகமாகவும் அவதானமாகவும் இருந்தால் பதட்டம் ஏற்படுவதைத் தடுத்துக்கொள்ளலாம். 

நேர்மறை மனப்பாங்கை வளர்க்க ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில நிமிடங்களை ஒதுக்கி தியானத்தில் ஈடுபடலாம். பிரார்த்தனை புரியலாம். மனதை அமைதிப்படுத்தவும் கற்றலுக்காக அதை திறந்துகொள்ளவும் தியானம் துணையாக இருக்கும். 

அன்பின் மாணவர்களே…!

பரீட்சையை ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கமால் ஒரு சவாலாகப் பார்ப்போம். பரீட்சை வாழ்வின் ஒரு நிகழ்வாகும். ஒரு நிகழ்வை சவாலின் மறுவடிவமாகப் பார்க்கும்போது அது எமது செயல்திறனை அதிகரிக்கச் செய்துவிடும்;. 

பரீட்சையில் தோற்றுவிடுவோமோ என்று சிந்திக்காமல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பாக பரீட்சை இருக்கிறது என்று சிந்திக்க மனதிற்கு இடம் கொடுப்போம். 

விடயத்தை சாதகமாக  பார்க்கும் நேர்மறை மனப்பாங்குடன் பரீட்சைக்கு முகம்கொடுக்க உங்களுக்காக பிரார்த்திக்கிறோம்.

---------------

அஸ்ஹர் அன்ஸார் 
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.