( மினுவாங்கொடை நிருபர் )

   கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கு அமைவாக அடக்கத்துக்கான ஆகக்குறைந்த உரிமைக் கோரிக்கையை புதிய நிபுணர்கள் குழுவானது புரிந்து கொண்டு, இறுதி செய்யப்பட்ட அறிக்கையில் சாதகமான முடிவை வெளிப்படுத்தலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பில் உள்ளதாக, நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

   கொரோனாத் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள், நாடளாவிய ரீதியில் வலுத்து வருகின்ற நிலையில், அதுபற்றிய தீர்மானத்தினை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து எடுப்பதற்காக, நுண்ணியல் மற்றும் விஞ்ஞானத் துறை சார்ந்த நிபுணர்கள் உள்ளடங்கலாக 11பேர் கொண்ட குழுவொன்று, ஆரம்ப சுகாதார சேவைகள்,  தொற்றுநோய்கள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே பதவி ஏற்றதன் பின்னர் நியமிக்கப்பட்டுள்ளது.

   இந்தக் குழுவின் நியமனம் மற்றும் அது இறுதி செய்துள்ள அறிக்கை மீதான எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

   அவர் மேலும் தெரிவிக்கையில்,

   கொரோனாத் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலங்களை எரிப்பதற்கும், அடக்கம் செய்வதற்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய தெளிவுபடுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

   இந்நிலையில், இலங்கையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழக்கும் அனைவரையும் எரிப்பதென்ற நிலைப்பாடே பின்பற்றப்படுகின்றது. இதுதொடர்பில் ஆராய்வதற்கான தொழில் நுட்பக் குழு முதலில் நியமிக்கப்பட்டபோதும், அந்தக்குழுவின் உறுதியான நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்படவில்லை.

   பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்தக்குழுவின் அங்கத்தவர்கள், எரிப்பதற்கான காரணங்களையே நியாயப்படுத்தி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால், கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஆகக்குறைந்த உரிமைகள் கேள்விக்குள்ளாகியுள்ளது.

   முஸ்லிம்களின் கலாசாரம், பண்பாட்டிற்கு அமைவாக உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிக்க வேண்டும் என்று, நான் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களும் வலியுத்தல்களைச் செய்து வருகின்றோம்.

   உலகில் 195 நாடுகளில் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. அவ்வாறு அடக்கம் செய்யப்படுவதால் வைரஸ் பரவலடையவில்லை.

   அதேபோன்று, கடல் மட்டத்திற்குக் கீழ் உள்ள எத்தனையோ நாடுகள், உடல்களை அடக்கம் செய்கின்றன.

   அங்கு நிலத்தடி நீர் மாசடையவில்லை. இவை அனைத்தும் துறைசார் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

   எனவே, நம்முன்னுள்ள உதாரணங்களை அடிப்படையாக வைத்துத் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் தொடர்ச்சியாக இந்த விடயம் சம்பந்தமாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், தற்போது 11 பேர் கொண்ட புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

   அந்தக்குழுவும் உடலங்களை அடக்கம் செய்வதால் ஏற்படும் சாதக, பாதக விடயங்களை ஆராய்ந்து, விஞ்ஞான ரீதியில் இவ்விடயத்தினைக் கையாளும் அதேநேரம், முஸ்லிம்களின் ஆகக்குறைந்த அடிப்படைக் கோரிக்கையையும் கருத்திற் கொண்டு, தனது இறுதி முடிவினை சாதகமாக வெளிப்படுத்தியிருக்கும் என்றும் எதிர்பார்க்கின்றேன் என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.