கொவிட் - 19 ஒழிப்புக்குத் தடுப்பூசி ஏற்றுதல் உள்ளிட்ட அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டம் தொடர்பில், பௌத்த மஹா சங்கத்தினருக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் விளக்கினார்.

ஜனவரி மாதம் 28ஆம் திகதியன்று, அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதலாவது தொகுதி கிடைக்கப்பெற்றது முதல், இதுவரையில் கிடைத்துள்ள அனைத்துத் தடுப்பூசிகள் மற்றும் நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் மூலம், ஓகஸ்ட் மாதம் நிறைவடைவதற்கு முன்னர், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியின் இரண்டு அலகுகளையும் வழங்கி முடிக்க முடியுமெனவும், ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும், “கண்டி ஸ்ரீ தலதா பெரஹராவுக்கு முன்னர், கண்டி மாவட்டத்தின் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. உலக சுகாதார ஸ்தாபனம், நாட்டின் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளைபட பாராட்டியுள்ளதுடன், தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில், தெற்காசிய நாடுகளின் வரிசையில், இலங்கையே முன்னணியில் இருக்கின்றது”  என்றும், ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பௌத்த ஆலோசனை சபை, 11ஆவது தடவையாக நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடிய போதே, ஜனாதிபதி அவர்கள் இதுபற்றித் தெரிவித்தார்.

நாட்டின் எதிர்காலத்துக்காக மேற்கொள்ளப்படும் கொள்கை சார்ந்த தீர்மானங்களுக்குச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருவது, எதிர்காலத் தலைமுறைக்குச் செய்யப்படும் பாரிய அநீதியாகுமென்றும், ஜனாதிபதி அவர்கள் இதன்போது எடுத்துரைத்தார்.

“கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகமானது, 40 வருட காலமாக நாட்டுக்குத் தேவையான பெரும் எண்ணிக்கையான கல்விமான்களை உருவாக்கியுள்ளது. உயர்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளுடன் சித்தியடைகின்ற மாணவர்கள்கூட, கொத்தலாவல பல்கலைக்கழகத்தைத் தங்களது உயர்க் கல்விக்காகத் தெரிவு செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்” என்றும், ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

உயர் கல்விக்காக தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம், நாடும் பெற்றோர்களும் இழக்க வேண்டி ஏற்படும் பாரிய தொகையைச் சேமிக்க வேண்டுமானால், உயர்ந்த தரம் வாய்ந்த இத்தகைய பல்கலைக்கழகங்கள் நாட்டில் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை அதன் கீழ் கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இதன்போது, கொவிட் ஒழிப்புக்காக ஆரம்பம் முதல் ஜனாதிபதி அவர்கள் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிகழ்ச்சித்திட்டங்களைப் பாராட்டிய மஹா சங்கத்தினர், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட நோக்கங்கள் குறித்து மக்களுக்கு அறிவூட்டி, சமூகத்தில் பரவி வரும் பிழையான தகவல்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினர்.

பெளத்த ஆலோசனைச் சபையின் உறுப்பினர்களான மஹா சங்கத்தினர், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டோர், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2021.07.17

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.