பாதுகாப்பு கருதி அரசியல்வாதிகள் வாகனங்களை அநாவசியமாக பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்திய ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும, நாட்டின் தற்போதைய நிலையில்  நாட்டுக்கான தமது இலட்சிய அர்ப்பணிப்பை நிரூபிக்க இதுவே நல்ல சந்தர்ப்பம் என்று தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (08) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், தற்போது நாட்டு மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், கொள்கை வகுப்பாளர்கள் என்ற வகையில், அரசியல்வாதிகள் இந்த நேரத்தில் சிக்கனத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றார். 

எரிபொருள் வரிசைகள் மற்றும் மின்வெட்டு ஆகியவற்றால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர் என்பதை தான் ஒப்புக்கொள்வதாகவும் இது ஒரு நெருக்கடியான நிலை என்றும்  இது ஒரு  அரசியல்வாதியின் பிரச்சினை அல்ல என்பதுடன்.நீண்ட திட்டமிடல் இன்மையால் ஏற்பட்ட நெருக்கடியாகும் என்று குறிப்பிட்டார்.

நமது நாட்டின் பொருளாதாரம் எரிபொருளால் எரிகிறது என தெரிவித்த அவர், எரிபொருளுக்காக மாதாந்தம் 400 மில்லியன் டொலர்களும் தினமும் 13 மில்லியன் டொலர்களும் தேவை என தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அவசர அவசரமாக செயல்படுத்த வேண்டும், அதற்கான தடைகளை நீக்க வேண்டும் என்றும், சட்ட தடைகள் இருப்பின் அந்த தடைகளை நீக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு வருவதாக எரிச்க்தி  அமைச்சர் அமைச்சரவையில் தெரிவித்த நிலையில்,  அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 மகேஸ்வரி விஜயனந்தன் - தமிழ் மிரர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.