இலங்கை கால்பந்தாட்ட  சம்மேளனத்தின் யாப்பை திருத்துமாறு சர்வதேச கால்பந்து சம்மேளனம் பல தடவைகள் அறிவித்தும் அது திருத்தப்படவில்லை எனவும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக இலங்கைக்கு ஏற்றவாறு அதன் யாப்பை துரிதமாக திருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர்   ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை கால்பந்தாட்ட  சம்மேளனத்தின் யாப்பு கடந்த 2002 ஆம் ஆண்டு சிறிதளவு திருத்தப்பட்டது. மீண்டும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் 2014 ஆம் ஆண்டு இந்த யாப்பை திருத்தும்படி இலங்கை   கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு அறிவித்த போதும் அது மாற்றப்படவில்லை. அப்போது கால்பந்தாட்ட  சம்மேளனத்தின் தலைவராக ரஞ்சித். ரொட்ரிகோ இருந்தார். மேலும்  அனுர டி சில்வா தலைவராக செயற்பட்ட சமயத்திலும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இந்த யாப்பை திருத்துமாறு அறிவித்திருந்த போதிலும் அது திருத்தப்படவில்லை.

2021ஆம் ஆண்டு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அடுத்த தேர்தலுக்கு முன்னர் இந்த யாப்பை திருத்த சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.அதன் எதிரொலியாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டு அதன் பிரதிகள் மே 2022 க்கு முன்னர் விளையாட்டு அமைச்சு மற்றும் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அனைத்து உறுப்பினர்களும் அனுப்பப்பட்டன.

இந்த புதிய யாப்பில்  சுயாதீன நிதி நிர்வாகம், சுயாதீன தேர்தல் முறை, சுயாதீன ஒழுக்காற்று குழுக்கள் உள்ளிட்ட தெளிவான அதிகார பகிர்வு முறையை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த யாப்பை  நிறைவேற்றுவதற்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் சபையின் மூன்றில் இரண்டு  அதிகாரம் ஏற்கனவே  கிடைத்துள்ளது.

இலங்கை கால்பந்தாட்ட மேளனத்தின் யாப்பை திருத்துவதற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் கண்காணிப்புகளுக்காக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் இரண்டு பிரதிநிதிகளும், ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஒரு பிரதிநிதியும் ஏற்கனவே நாட்டுக்கு வந்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.