ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு திருவிழா

தெல்தோட்டை, மெதகெகில, ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிவப்பு, நீலம் மற்றும் பச்சை இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு திருவிழா கடந்த சனிக்கிழமை (18) மிக விமர்சையாக நடைபெற்று முடிந்தது. 
கடும் போட்டிக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த விளையாட்டு திருவிழாவின் இறுதியில் திரு. ஹாரிஸ்கான் அவர்களின் தலைமையிலான நீல இல்லம் 2023ம் ஆண்டுக்கான வெற்றி இல்லமாக தெரிவானது. 
இரு தினங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு திருவிழாவில், முதல் கட்டமாக மரதன், கெரம், மென்பந்து, கரப்பந்து, உதைப்பந்து போன்ற குழு நிகழ்ச்சிகள் ஜனவரி மாதம் 21 திகதி நடைபெற்றன. 
விளையாட்டு திருவிழாவின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சிகள் ஊர் மக்களின் அமோக வரவேற்புடன் கடந்த 18ம் திகதி காலை 08:30 மணிக்கு ஆரம்பமாகியது. பாலர் பாடசாலை சிறார்களுக்கான 50 மீற்றர் ஒட்டப் பந்தயத்துடன் இனிதே ஆரம்பமாகிய விளையாட்டு திருவிழா 06 வயதின் கீழ், 08 வயதின் கீழ், 10 வயதின் கீழ், 13 வயதின் கீழ், 17 வயதின் கீழ், 20 வயதின் கீழ், 30 வயதின் கீழ், 30 வயதின் மேல் என அனைத்து பிரிவுகளுக்குமான போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 இரு நாட்களின் முடிவில் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் 2023ம் ஆண்டுக்கான வெற்றிபெற்ற இல்லமாக அறிவிப்பாளர் யாகூப் அவர்களினால் திரு. ஹாரிஸ்கான் அவர்களினால் வழிப்படுத்தப்பட்ட நீல இல்லம் அறிவிப்பு செய்யப்பட்டது. அனைவரினதும் கரகோஷத்துடன் கின்னம் வழங்கும் வைபவத்துடன் விளையாட்டு திருவிழா இனிதே நிறைவு பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலாநிதி அஷ்ஷெய்க் முனீர் சாதிக் அவர்கள் கலந்து கொண்டார்.
ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு திருவிழா நிகழ்வினை பவாஸ் ஆசிரியர் தலைமையில் திரு. ஸாலிஹ், திரு. சிபான், திரு. இர்ஸாத், திரு. ஸல்மான், திரு. ரிபாஸ் மற்றம் திரு. நுஸ்ரி ஆகியோரை உள்ளடக்கிய ஏற்பாட்டுக் குழு வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தது.

எஸ்.ஏ.எம். பவாஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.