மிகப்பெரிய நெருக்கடி காலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு மாறியிருக்கும்  இந்த நாட்களில் பல முக்கிய தீர்மானங்களுக்கு வரவேண்டிய சூழ்நிலை இருக்கும் இக்காலகட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னுடைய உயர்பீட கூட்டத்தை இன்று கூட்டியது.

இன்று (21) காலை 10.30க்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்வுயர்ப்பீட கூட்டம் மாலை 03.30 வரை மிக காரசாரமான பல விவாதங்களுடனும் வாத பிரதிவாதங்களுடனும் நடைபெற்றுள்ளது.

இங்கு பிரதானமாக கல்முனை உப பிரதேச செயலக விவகாரம், மீண்டும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்பது தொடர்பில் பிரதானமாக ஆராயப்பட்டுள்ளது. கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் கடுமையாக சூடுபிடித்துள்ளதால் இதனை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் இந்த பிரச்சினை சம்பந்தமான கதையை ஆரம்பித்தவுடன் சகல உயர்பீட உறுப்பினர்களும் இந்த விடயத்தை யாருக்கும், எச்சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்க முடியாது. எனவும் அரசுக்கு நிபந்தனைகளை விதித்து உடனடி தீர்வை பெற வேண்டும் என கூட்டாக குரல்கொடுத்துள்ளனர்.

பிரதமர் ரணிலின் கோரிக்கையான அமைச்சு பதவிகளை மீள பொறுப்பெடுப்பது தொடர்பில் அங்கு வாத பிரதிவாதங்கள் கடுமையாக இருந்துள்ளது. முஸ்லிங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் எந்த முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சு பதவிகளை ஏற்க கூடாது. முக்கியமாக கல்முனை பிரச்சினை அடங்கலாக இப்போது மிக முக்கிய பிரச்சினைகளாக மக்களுக்கு மாறியிருக்கும் பிரச்சினைகளை முடிக்காமல் யாரும் பதவிகளை ஏற்க கூடாது என அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான ஹரீஸும், பைசால் காசிமும் இன்னும் பலரும் வலியுறுத்தி பேசியுள்ளனர்.

இதனை அரசுக்கு நிபந்தனையாக வைத்து கல்முனை பிரச்சினை ஓரிரு வாரங்களில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும், சகல பிரதேசங்களிலும் தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற இந்த அரசு எமது தலைமைக்கும் முஸ்லிம் எம்.பிக்களுக்கு வாக்குறுதியை வழங்கிவிட்டு மறுகணமே தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற சில முன்னாயத்தங்களை செய்திருந்தது. இது முஸ்லிம் சமூகத்துக்கு அவமானமான செயல். இது முஸ்லிங்களின் முகத்தில் கரிபூசியதை போன்றது. என ஹரீஸ் எம்.பி அவர்கள் பேசியதை பெரும்பான்மை உறுப்பினர்களும் கட்சியின் தலைமைக்கு வலியுறுத்தி பேசியுள்ளனர்.

இங்கு பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை பிரதமர் அவர்கள் எதிர்கொண்டுள்ள இச்சுழ்நிலையில் கல்முனை விவகாரம் சம்பந்தமாக பிரதமர் தனக்கு முன்னிலையில் முஸ்லிம் எம்.பிக்களிடம் தந்த வாக்குறுதியை குறிப்பாக கல்முனை கணக்காளர் விவகாரம் தொடர்பிலான உறுதிமொழியை மீறிவிட்டார். எந்த காரணத்தை கொண்டும் இழுத்தடிப்பு செய்ய முடியாது. இந்த விடயங்களுக்கு ஓரிரு நாளில் அரசு நிரந்தர தீர்வை தரவேண்டும். அரசு எந்த தீர்வையும் தராமல் யாரும் அமைச்சை பெறப்போவதில்லை என காட்டமாக பதிலளித்துள்ளார்.

கணக்காளர் விவகாரத்தில் பிரதமர் ரணில் வாக்குறுதியை மீறியதனால் அவரது தீர்மானத்தை அவர் வாபஸ் பெற வேண்டும் அதை அவர் செய்யாமல் விட்டால் நாங்கள் எதிர்க்கட்சி ஆசங்களுக்கு சென்று அமரபோகும் செய்தியை நாளை முஸ்லிம் எம்பிக்களுடன் சென்று அவரை அவசரமாக சந்தித்து கூறப்போவதாக சபைக்கு அறிவித்த போது தக்பீர் முழக்கத்துடன் சபை அதை ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த அதிரடி முடிவு அரசுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஒரு அக்னி பரீட்சையாக இருக்கும் என முஸ்லிம் காங்கிரஸ் நம்புகிறது. என நம்பத்தந்த தாருஸலாம் வட்டாரம் தெரிவித்தது.

- அபு ஹின்சா -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.