கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 155 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது. இந்நிலையில் புதிதாக கொழும்பில், நரஹேன்பிட்டி - தாபரே மாவத்தை, கொழும்பு 7  சுதந்திர சதுக்கம் அருகே 60 ஆம் தோட்டம்,  ஹெவலொக் லேன் பகுதிகளில் தொற்றாளர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  புதிதாக மேலும் 134 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு நேற்று அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 21 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

 கொழும்பு 14, நாகலகம் வீதி,  கொழும்பு 13 கொட்டாஞ்சேனை வீதியின் 64 ஆம் தோட்டம்,  கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு 11 குணசிங்கபுர,  வாழைத்தோட்டம் பகுதிகள்,  பம்பலபிட்டி - பிரிஷ்டா பிளேஸ்,  மருதானையின் இமாமுல் அரூஸ் மாவத்தை,  ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தை, நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தை, கொழும்பு 7 - சுதந்திர சதுக்கம் - 60 ஆம் தோட்டம், ஹெவலொக் லேன், ஒருகொடவத்த - மஜீத் பிளேஸ்,  மீத்தோட்டமுல்லை - வெடுகொடவத்தை,  பெரேரா மாவத்தை பகுதிகள்,  வெல்லம்பிட்டி - வெலேவத்தை,  மஹபுத்துகமுவ - நவாரவத்தை,  மிரிஹானை - விமலவத்த வீதி, தெஹிவளை - றப்பர் தோட்ட வீதி,  அருணாலோக்க மாவத்தை,  பிலியந்தலை பகுதியின்  கிராமோதய மாவத்தை,  பண்னிபிட்டிய - பலனவத்த ஆகிய 21 இடங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

 இந்நிலையில் முடக்கப்பட்ட பகுதிகளான நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தை, கொழும்பு 7 - சுதந்திர சதுக்கம் - 60 ஆம் தோட்டம் ஆகிய பகுதிகளில் புதிதாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அப்பகுதிகளைச் சேர்ந்த 134 பேர் கொரோனா தொற்று குறித்த விஷேட பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்இ மட்டக்களப்பு - புனானை தனிமைப்படுத்தல் முகாமுக்கு நேற்று அனுப்பப்பட்டனர்.

 நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தையில் ஏற்கனவே முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், புதிதாக  இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் அயல் வீட்டுபெண் ஒருவரும் குறித்த வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்த இரட்டை பிள்ளைகளில் ஒருவருக்கும் இந்த தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.