ஆதிப் அஹமட்


 காத்தான்குடி தள வைத்தியசாலையானது ஆரம்பத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட சாத்தியமுள்ளவர்களை தனிமைப்படுத்தப்படுகின்ற  தனிமைப்படுத்தல் நிலையமாக அறிவிக்கப்பட்டது. எனினும் பின்னர் கிழக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்படுகின்ற கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையாளிக்கும் நிலையமாக அறிவிக்கப்பட்டிருந்தது.  எனினும் நேற்றைய தினம் கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்கள் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இந்த வைத்தியசாலையின் சுகாதார சீர்கேடுகள் சீர்செய்யப்படாது இவ்வைத்தியசாலையினை அண்மித்து வாழ்கின்ற குடும்பங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத நிலலையிலே குறித்த நோயாளர்கள் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்து இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று இன்று(21) காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வைத்தியசாலையிலுள்ள வைத்திய கழிவுகளை எரிக்கின்ற இயந்திரம் முற்றுமுழுதாக பழுதடைந்திருப்பதோடு முறையான கழிவகற்றல் தொகுதியானது திறந்த முறையிலே அமைந்துள்ளது எனவும் இந்த சுகாதார சீர்கேடுகளை சீரமைத்து இந்த வைத்தியசாலையினை அண்மித்து வாழ்கின்ற சுமார் 600 குடும்பங்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களுக்கு இந்த வைத்தியசாலை மூலமாக நோய்த்தொற்று பரவ வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்திய  பின்னர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆரம்பிக்குமாறு எழுத்து மூலமாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் அனுப்பப்பட போதும் இது தொடர்பில் எந்த கரிசனைகளும் காட்டப்படாமலே நோயாளர்களை சிக்கிச்கைக்கு அனுமதித்துள்ளதானது பெரும் அநீதியான விடயம் என காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் இதன்போது தெரிவித்தார்.

மேலும் காத்தான்குடி பிரதேசமானது தெற்காசியாவிலேயே அதிக சனநெரிசல் நிறைந்த பிரதேசமாக காணப்படுகின்றது.இந்த சுகாதார சீர்கேடுகள் சீர்செய்யப்படாது நோயாளர்களை அனுமதித்ததானது வெறுமனே காத்தான்குடிக்கு மாத்திரமான பிரச்சினை அல்ல எனவும் இது முழு மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணம்  தழுவிய பிரச்சினை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

காத்தான்குடி பிரதேசத்தில் இன்று வரை எந்த கொரோனா நோய் தொற்றாளர்களும் இனங்காணப்படாத நிலையில் இதன் பின்னராக இந்த சிக்கிச்சை நிலையம் முறையான பாதுகாப்புக்களோடு அமைக்கப்படாததன் காரணமாக எவரேனும் நோய்த்தொற்றுக்கு இலக்காகினால் அதற்குரிய முழுப்பொறுப்பையும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரே ஏற்றுக்கொள்ள வேண்டுமென உத்தியோகபூர்வமாக தான் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தவிசாளர் இதன்போது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும் குறித்த சிகிச்சை நிலையம் அமையப்பெற்றுள்ளதன் காரணமாக காத்தான்குடி மக்கள் ஊரடங்கு வேளைகளில் கவனமாக நடந்துகொண்டது போல கரிசனையோடு தொடர்ந்தும் நடந்துகொள்ளுமாறும், தொடராக பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் அவசிய தேவைகள் தவிர வேறு எந்த தேவைகளுக்கும் அநாவசியமாக வெளியிலே வரவேண்டாமெனவும் மக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் இதன்போது தெரிவித்தார்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.