லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால், விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவில், 10 வீதத்தை உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக, லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுசந்த கோசல விதானாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் மாத்திரமே நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்கிறது.

எனவே, அதனை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யும் பொறுப்பு தங்களுக்கு உள்ளதால், இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் சுசந்த கோசல விதானாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேநேரம், 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தது.

எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ள போதிலும், தேசிய எரிபொருள் அட்டை முறைமை நடைமுறைப்படுத்தப்படும் வரையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வாகனங்களை வைத்திருப்போர், www.fuelpass.gov.lk   என்ற இணைத்தளத்துக்கு பிரவேசித்து தங்களைப் பதிவுசெய்து கொள்ளலாம்.

இதேநேரம், வெளிநாட்டு ஒதுக்கம் தொடர்பான பிரச்சினையால், எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் சிற்சில வரையறைகளை விதிக்க வேண்டி ஏற்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி என்பனவற்றால், எரிபொருளுக்கான நிதித் தேவையானது கடந்த சில மாதங்களில், 200 மில்லியன் டொலரிலிருந்து 600 மில்லியன் டொலர் வரையில் அதிகரித்துள்ளது.

எனவே, சர்வதேச நாணய நிதியம், ஏனைய அபிவிருத்தி நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களின் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் வரையில், சில மாதங்களுக்கு எரிபொருள் பயன்பாட்டை சிற்சில வரையறைகளுக்கு உட்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

பேருந்துகள் மற்றும் தொடருந்துகளுக்கு வரையறையின்றி, எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும், தனிப்பட்ட ரீதியில் பயன்படுத்தப்படும் ஏனைய அனைத்து வாகனங்களுக்கும், சிற்சில வரையறைகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வரையறைகள் தொடர்பான தீர்மானத்தை, எரிபொருள் பதிவு நடவடிக்கைகளின் பின்னர், எதிர்வரும் நாட்களுக்குள் அறிவிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.