இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் இரண்டு நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

மேற்கு ஜாவா மாகாணம், சியாஞ்சூா் பகுதியில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், 50,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதில், 271 பேர் உயிரிழந்த நிலையில், 2,000-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போன 150 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாக்ரக் என்ற கிராமத்தில் புதன்கிழமை மாலை இடிபாடுகளில் சிக்கியிருந்த சடலத்தை மீட்புப் படையினர் மீட்கும்போது சடலத்திற்கு கீழே அஸ்கா மௌலானா மாலிக் என்ற 6 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் அவரது பாட்டியின் சடலத்திற்கு கீழே உயிருடன் இருந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையுடன் மீட்புப் படையினர் மீட்புப் பணியை தொடர்ந்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.