(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 23084/22 எனும் தனிப்பட்ட  வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் 2023 ஜனவரி 17 ஆம் திகதிவரை ஒத்தி வைக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.  அனைத்து தரப்பினரதும் இணக்கத்துடன் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த  கோட்டை நீதிவான் நீதிமன்ற வழக்கில் சந்தேக நபராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டு  பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணையை வலுவிழக்க செய்து உத்தரவிடுமாறு  கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சி.ஏ.ரிட் 354/22 எனும் எழுத்தாணை மனு ( ரிட்) மீதான பரிசீலனைகளின் பின்னர்  இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி ரிட் மனுவை  ஏற்கனவே விசாரணைக்கு ஏற்ற மேன் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும்  ஜனவரி 17 ஆம் திகதி வாதங்களை முன் வைக்க திகதி குறித்தது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான  தம்மிக கனேபொல மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோர் அடங்கிய குழு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.

சந்தேக நபராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டு  பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணையை வலுவிழக்கச் செய்து உத்தரவிடுமாறு மனுதாரர் கோரியிருந்த போதும், கடந்த தவணையின் போது  10 வாரங்கள் வரை  கோட்டை நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 23084/22 எனும் தனிப்பட்ட  வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் இக்காலப்பகுதியில், மைத்திரிபால சிறிசேனவுக்கு  பாதகமான வகையில் உத்தரவுகள் எதனையும் பிறப்பிக்க கூடாது எனவும்  மேன் முறையீட்டு நீதிமன்றம் தனது  கோட்டை நீதிவானுக்கு உத்தரவிட்டிருந்தது.

கோட்டை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  தனிப்பட்ட வழக்கின் சந்தேகநபராக தமது பெயரை குறிப்பிட்டு, கடந்த ஒக்டோபர்   14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்து, கடந்த செப்டம்பர்  16 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட  நீதிவானின் கட்டளையை வலுவிழக்க செய்யுமாறே மைத்திரிபால சிறிசேன   மனுவில்கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தமக்கு எவ்வித தொடர்புகளும் இல்லாத நிலையில், அது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனு ஒன்றின் பிரதிவாதியாக தாம் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டமை நீதியான விடயம் அல்லவெனவும், இயற்கை நீதிக்கு புறம்பான செயல் எனவும் தெரிவித்து இந்த எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



மனுவின் பிரதிவாதிகளாக கோட்டை நீதவானும் நீதிமன்ற பதிவாளரும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி  ரிட் மனு மீதான இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், கோட்டை நீதிவான் திலின கமகே விடுத்த அறிவித்தல் பிரகாரம் அன்றைய தினம் முற்பகல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோட்டை நீதிமன்றில் ஆஜரானார்.

இதன்போது மைத்திரியின் சட்டத்தரணிகள் மேன் முறையீட்டு நீதிமன்றின்  இடைக்கால தீர்மானத்தை கோட்டை நீதிவானுக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 23084/22 எனும் தனிப்பட்ட  வழக்கு எதிர்வரும் 2023 ஜனவரி மாதம் 27 ஆம் திகதிவரை கோட்டை நீதிவனைனால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக  ரிட் மனு ஆராயப்பட்ட போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில்  ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் தலைமையில், ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய சிரேஷ்ட சட்டத்தரணி ஜீவந்த ஜயதிலக,  சட்டத்தரணிகளான ஹபீல் பாரிஸ், கீர்த்தி திலகரத்ன, அஷான் பண்டார உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.

 சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ரொஹந்த அபேசூரியவும்

 பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவும் வாதங்களை முன் வைத்தனர்.

உயிர்த்த  ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில்  அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலத்த காயமடைந்து, கால் ஒன்றை இழந்த ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 298 பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தனிப்பட்ட முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.  அவரது அலட்சியத்தால் குறித்த தாக்குதலில் மரணங்கள் சம்பவித்ததாக மனுவில்  அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அம்மனு தொடர்பிலேயே கோட்டை நீதிவான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.