இஸ்லாமிய அமைப்புகளின் தடை நீங்கம் பற்றிய வர்த்தமானி விரைவில் வெளியாகும் 

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தரப்பினருடனான பேச்சுவார்த்தை காலதாமதமாவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் ஆகியோர் இன்று (05) காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினர். 



இதன்போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 



ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தரப்பினருடனான பேச்சுவார்த்தை காலதாமதமாவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான தாங்கள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியதாகவும் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னர் உடனடியாக குறித்த பேச்சுவார்த்தைக்கு முஸ்லிம் கட்சிகளையும், முஸ்லிம் எம்.பிக்களையும் அழைக்க உள்ளதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.  



மேலும், தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களின் தடைநீக்கம் தொடர்பில் இதுவரை வர்த்தமானி அறிவிப்பு வெளிவராமை சம்பந்தமாக வினவியபோது பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகத்தர்கள் அது தொடர்பில் சகல பணிகளையும் மேற்கொண்டு வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கையெழுத்திட தேவையான நடவடிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் தடைநீக்க வர்த்தமானி அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 



மேலும் முஸ்லிம் சிவில் நிர்வாகசேவை அதிகாரிகளுக்கு உரிய கடமைப்பொறுப்புக்களை வழங்குவதில் உள்ள பாரபட்சம் தொடர்பிலும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டதாகவும் இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் புத்திஜீவிகளையும், முஸ்லிம் சிவில் நிர்வாக சேவை அதிகாரிகளையும் விரைவில் தான் சந்தித்துப்பேச ஏற்பாடு செய்வதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.  



அஸ்வெசும பயனாளிகள் தெரிவில் பொறுத்தமான பயனாளிகள் புறக்கணிக்கப்பட்டுள்ள விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு முன்வைத்தபோது உரிய பயனாளிகளுக்கு இந்த உதவிகள் கிடைக்கும் விதமாக அஸ்வெசும பயனாளிகள் தெரிவில் இடம்பெற்றுள்ள குறைபாட்டை நிவர்த்திசெய்ய உள்ளதாக ஜனாதிபதி உறுதியளித்தார். 



மேலும் மாகாண சபைகளில் உள்ள நிர்வாக குறைபாட்டை சீர்செய்யவும், நிர்வாக திறனை அதிகரிக்க வேண்டிய அவசியம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. நாட்டிலுள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் மாகாண அமைச்சுக்களின் நிர்வாக வினைத்திறனை அதிகரிக்க புதிய பொறிமுறையை உருவாக்கி அதன்மூலமாக மாகாண அமைச்சுக்கள் வினைத்திறனுடன் செயற்பட வழிவகை ஏற்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது எங்களிடம் உறுதிபட கூறினார். 



மட்டுமின்றி ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது என  பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார்.

   

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.