பாடசாலை கட்டமைப்பில் ஆசிரியர்கள் பற்றாக்குறை!

 பாடசாலை கட்டமைப்பில் 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 இது தொடர்பில் இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் மேலும் தெரிவிக்கையில்,

 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சிடம் சரியான வேலைத்திட்டம் இல்லாத காரணத்தால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

2018 ஆம் மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி, கல்வியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கலாசாலைகளுக்குள் நுழைய எதிர்பார்த்த மாணவர்கள் சுமார் 5 வருடங்களாக கல்வியியற் கல்லூரி மற்றும் ஆசிரியர் கலாசாலைகளுக்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்படவில்லை என குறித்த சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.

 கடந்த கொவிட் பருவத்தில், பல ஆசிரியர் கல்லூரிகள் சிகிச்சை மையங்களாகப் பயன்படுத்தப்பட்டன. அதன் பயன்பாட்டிற்குப் பின்னர் அங்கிருந்த மெத்தைகள் மற்றும் தலையணைகள் அழிக்கப்பட்டதால் அவர்களின் பல வளங்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 அத்துடன், மாணவ ஆசிரியர்களின் இறுதிப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகள் நிறைவுறுத்தப்பட்டு, அவர்களுக்கான பெறுபேறுகள் வழங்கப்பட்டு ஆசிரியர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த நிலையில், தங்களுக்கான விடைத்தாள் திருத்தப்பணிகளுக்கான கட்டணம் இதுவரையில் செலுத்தப்படவில்லை என குறித்த சங்கத்தின் உப செயலாளர் எஸ்.எம்.பீ பண்டார தெரிவித்துள்ளார்.

 கண்டியில், நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.